இன்னும் ஓரிரு நாட்களில் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படும்.
ஆமாம் அனுசரிக்கப்படவேண்டிய ஒன்றுதான்.
ஆம் போற்றுதலுக்குரியவள்
அவள்.
மகளிர் தின சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பப்படும். மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு தள்ளுபடி விற்பனைகளில் பல மணிநேரம் செலவிடுவோம். ஐ சல்யூட் விமன் தொடங்கி பெண்கள் நாட்டின் கண்கள் என்பது போன்று பல தரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் , கவிதை , பேஸ்புக் ஸ்டேடஸ் இன்ன பிற. பல பெண்களை நினைவுகூர்வோம். பெண் தாயாகவும் , மனைவியாகவும், மகளாகவும் , ஆயாவாகவும் , வேலைக்காரியாகவும் , ஆசிரியையாகவும் , ஆசானாகவும் , போகப்பொருளாகவும் , ஏன் தெய்வமாகவும் இருப்பதை உணர்ந்து சிலிர்ப்படைந்து அவளை எண்ணி பெருமிதம் கொள்வோம். ஒவ்வொரு ஆணின் மகத்தான வெற்றிக்குப்பின்னால் இருப்பது ஒரு பெண் என்று நம்முடைய பணிவினை பறைசாற்றுவோம். எல்லாவற்றையும் விட உயர்ந்தவள் பெண் என்று சூளுரைப்போம்.
ஆம் போற்றுதலுக்குரியவள் அவள்.
இன்னொரு காலைப்பொழுதில் ,
வீட்டில் உங்களை சரிசமமாக நடத்துவதா ? கோபம் வரும் எங்களுக்கு; பேருந்தில் பயணம் செய்யும்போது நாங்கள் பார்வைகளால் உங்களை சுட்டெரிப்போம்; உங்களுக்கென்று ஒதுக்கிய இருக்கைகளில் அமர்ந்து உங்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளக்குவோம்; தெருக்களில் , கூட்ட நெரிசலில் உங்களை வேசிகளாய் பாவிப்போம்; அலுவலகத்தில் சக ஊழியராய், சபலராய் உங்களை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி இன்புறுவோம். சினிமா பாணியில் உன்னை உன் சிறப்பை கேலிக்கு உள்ளாக்குவோம்; அமலா பால் போல் இருக்கிறாய் என்போம்;
சீறினால் அமில மழையில் உன்னை அமிழ்த்துவோம்; காலில் போட்டு மிதிப்போம்; கற்பழிப்போம்.
இவற்றையும் தாண்டி நீ மீண்டுவந்தால், எதிர்த்து நீ முழங்கினால்,
கவலைப்படாதே நாங்கள் உன் பக்கம் நிற்ப்போம் . உன்னை வீர மங்கையென்று; மரணத்தை வென்றவள் என்று பெருமிதம் கொள்வோம். உனது பெயரில் , உன் ஞாபகமாக விருதொன்றை அறிவிப்போம். உன் போல் உள்ளவர்களுக்கு விருதளித்து போற்றுவோம். புகழ்வோம்.
சாதாரண பெண்களை உன்போல உருவாக்க , விருதுகளை வாங்கி குவிக்க எங்களால் முடிந்தவற்றை செவ்வனே செய்வோம். அர்ப்பணிப்போம்.
ஆம் போற்றுதலுக்குரியவள் அவள்.
பாரதி பாடிட்டடான் எங்கள கேக்காம..,
மனதில் உறுதி வேண்டும்
; கண் திறந்திட வேண்டும் ;
நினைவு நல்லது வேண்டும்
; பெண் விடுதலை வேண்டும் ;
நாங்க முனுமுனுப்பதோ : அடடா அல்வா துண்டு இடுப்பு ...
Comments
Post a Comment