Skip to main content

யாம் பெற்ற இன்பம்



ஆதவனின் சிறுகதை தொகுப்பில் எனக்கு பிடித்த சில எழுத்துக்களை இங்கே பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.

இந்த சமூக கட்டமைப்பு குறித்து ,

" இங்கே அறையில் மனது நிச்சலனமாகவும், அமைதியாகவும் இருக்கிறது. வெளியே போனால் எல்லாமே மாறிவிடும். தன் அறையில் அவன் தான் அரசன். ஆனால் வெளியே அவன் பல்வேறு இடங்கள் , சூழ்நிலைகள், மனிதர்கள் ஆகியவற்றின் அடிமை. "

பணம் குறித்து ஒரு சிறுகதையில் ,

" பணம் மனிதனுடைய தோற்றத்தையும், மனப்போக்கையும் மிகவும் மாற்றி விடுகிறது. தூய்மை, எளிமை முதலிய மெல்லிய உணர்வுகளின் கூர் மழுங்கச் செய்து விடுகிறது. பணம் சிலவற்றை கொடுப்பதுபோலச் சிலவற்றை எடுத்துக்க் கொண்டும் விடுகிறது. பணம் கொடுக்கிற விஷயங்கள் பணம் எடுத்துக்க் கொள்ளும் விஷயங்களை விட உண்மையில் மதிப்பு வாய்ந்தவைதாமா ? "

நாம் சூழ்நிலைகளின் கைதிகளாய் பல்வேறு வேஷம் தரித்து வாழ்க்கை முழுவதும் உழன்று கொண்டிருப்பதை "கால் வலி" என்ற கதையில் அப்பட்டமாக உணர்த்தும் தருணம் இங்கே ,

" இப்போது யோசிக்கும்போது அவ்வளவும் தவறாகத் தோன்றியது. அந்த முதல் நாள் அவன் நடந்து கொண்ட விதம் எல்லாமே.அவன் அவர்களுக்காகத் தன் இயல்புக்கு மாறான ஒரு வேஷம் அணிந்திருக்க வேண்டாம். ஆனால் எது வேஷம், எது வேஷமில்லை ? எது அவனுக்கு இயல்பானது ? எது அவனுக்கு இயல்பற்றது ? ஏதேதோ உந்துதல்களின் அடிப்படையில் எப்படி எப்படியோ நம்மை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொள்கிறோம். இந்த உந்துதல்கள் உண்மையாயிருக்கிற வரையில் இந்த வெளிப்பாடுகளும் உண்மையானவைதாம்.

ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொன்று உண்மையாக தோன்றுகிறது. முக்கியமானதாக தோன்றுகிறது. நம்மை இயங்க வைக்கிறது. அப்படி நம்மை இயங்க வைக்கும் ஒவ்வோர் உண்மையையும் இறுதியில் ஒரு நாள் பொய்யென உணர்ந்து நிராசையடைகிறோம்; வேறு உண்மைகளில், அப்படி அந்தக் கணம் தோன்றுபவற்றில் தஞ்சமடைகிறோம். மனித இயக்கத்தின் , யத்தனங்களின் அடிப்படையே இவ்வகை தோற்றங்கள் தாமே ? பொய்கள் தாமே ? "

"லைட்ஸ் ஆன்" எனும் சிறுகதையில் நம்மீது திணிக்கப்படுகின்ற வேஷங்களைக் குறித்து ,

" பஸ் ஸ்டாண்டில், எனக்கு எதிர் ப்ளாக்கில் வசித்த கிழவர் நின்று கொண்டிருக்கிறார். என்னைப் பார்த்தும் விட்டார். புன்னகை. ரொம்ப நேரமா நிற்கிறீர்களா ? ராட்டன் பஸ் சர்வீஸ் , இத்யாதி. முதல் சந்திப்பில் மாறுபடுகிற , கோபமுள்ள இளைஞனாக என்னைக் காட்டிக் கொள்ளாமல், மரபுகளுடன் , அவர் நம்பிய உண்மைகளுடன் என்னைக் காட்டிக் கொண்டதன் பலனை அதன் பிறகு அவரை சந்திக்கும் போதெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் . சில வேடங்களை நாமாக அணிகிறோம். சில , நம்மீது திணிக்கப்படுகின்றன. "

இன்னும் பல இருக்கிறது. அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Comments

Popular posts from this blog

லாஜிக்கல் என்ட்

மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  அறுவைசிகிச்சைக்குப்பின் இரண்டு வார ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியதால் நான் வீட்டில். அட்ரா சக்கை . அட்ரா சக்கை. சாதரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்தான் நான். புத்தக புழுவா  இல்லை புத்தக பெருச்சாளியா ன்னு எல்லாம் சொல்லத்தெரியாது.  ஓர் அளவிற்கு படிப்பேன். வெகு நாட்களாக புத்தகம் படிக்கும் நோக்கம் இருந்தும் இப்போ அப்போ என்று தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன்.   அம்மா சொல்றது தான் ஞாபகத்திற்கு வரது : மருங்கனமே அதுக்கெல்லாம் !!! ஒரு மாற்றத்திற்கு புத்தகங்களிடம் தஞ்சமடையலாம் என்று எண்ணி என்னுடைய மிகச்சிறிய  அளவிலான புத்தக அலமாறையில் நோட்டமிட்டேன்.  பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கென் பொல்லெட் (Ken Follet ) , இடையிடையே சிலபல ஜான் க்ரிஷம் ( John Grisham ) மற்றும் நெல்சன் டிமில்லி  ( Nelson Demille ) , ஒன்றிரண்டு பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth ) மற்றும்   ஜெப்ப்ரே ஆர்ச்சர் (Jeffery Archer ) போன்ற பிக்...

ட்ராவல்

பயணம் ?    இல்லை திட்டம், ஆகச் சீற்றம் , ஜல்தி ஓட்டம் , ரன்னிங் ஏற்றம், அசால்ட்டு நோட்டம்,  ஜன்னலோரம் ,  மழைச்சாரல் ,  சில்லென காத்து , கின்லே பாட்டில் ,  பிஸ்கட் பாக்கெட்,  எண்ணெய் தோய்ந்த இருக்கை,  சக பயணிகள் ,  செல் போன் பேச்சு ,    எஸ் எம் எஸ் , கீச்சு ,  தூக்கம் போச்சு,   செல்போன் பாட்டு, புஷ் பாக் சீட்டு ,  ஹை பீம் லைட்டு,  லேட்டஸ்ட் பாட்டு , லவுட் ஸ்பீக்கர், ஹார்ன் சத்தம்,   அரைகுறை தூக்கம்,  குறட்டை சத்தம், குருவிச்சத்தம், விடியற்பொழுது, வீட்டு முற்றம் நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)   

நான் - ஸ்மார்ட்போன் (Non-Smartphone)

சில நாட்களாக எனக்குள் ஒருவன் என்னை கேட்டபடியே இருக்கிறான். ஆமாம் இன்றைய நவீன யுக விஞ்ஞான வளர்ச்சி அல்லது கலாச்சார வளர்ச்சி / வீழ்ச்சி ( அட இந்த ஸ்மார்ட் போன் , டாப்லெட் வகையறாக்கள் தாம் ) , மற்றும் நம் வாழ்வில் அதன் தாக்கம் இதைப்பற்றிய உன் பார்வை. நீ அதற்க்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா ? நிற்க. நான் பலமுறை இது குறித்த பல தகவல்களை , பல தரப்பட்ட சாதக பாதகங்கள்  குறித்த கருத்துக்ககளை இன்டர்நெட் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்ததாலும், அதனுடைய தாக்கம் சற்றே அதிகமாக என்னுடைய தினசரி வாழ்வில் இருப்பதை உணர்ந்துள்ளதாலும் நான் இதுவரை இம்மாற்றத்தினை ஒரு பெரிய சலிப்புடன் ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன் என்பதே சரியான ஒப்புதலாக இருக்கும். நம்முடைய சமூகம் ,அரசியல் மற்றும்  ஆட்சிமுறை குறித்து வெகுண்டெழுந்து எப்படி ஒன்றும் செய்ய இயலாமல், சொல்லப்போனால் செய்வதற்கு முனையாமல், வக்கற்றுப்போய் கோபமுற்று ஒரு மூலையில் வெறும் பார்வையாளனாக சலிப்புடன் (ஆமாம் சலிப்புடனே..) ஏற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேனோ அவ்வாறே இதிலும். இதிலென்ன ஆச்சர்யம் வ...